கோவையில் மருத்துவரின் தாயாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான தம்பதி குறித்து நேபாள அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்குமார். இவருடைய 82 வயது தாயார் கஸ்தூரி  வீட்டில் தனியாக வசித்து வந்தார். எனவே அவருக்கு உதவுவதற்காக, நேபாளத்தைச் சேர்ந்த சுர்ஜா 42 வயதுடைய பெண்ணை வேலைக்கு அமர்த்தினர்.

அந்த வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணம் இருந்தது. அதை பார்த்ததும் சுர்ஜா நேபாளத்தில் உள்ள தனது கணவர் ராஜீவிற்கும் தகவல் தெரிவித்தார்.இதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி ராஜுவ் – சுர்ஜா மற்றும் உறவினர்கள் ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமுர் புக்தா ஆகியோர் கஸ்தூரி கொலை செய்து விட்டு பணம் – நகை கொள்ளை அடித்து தப்பி சென்றனர்.

இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமு புக்தா ஆகியோரை கைது செய்தனர். ராஜு – சுர்ஜா தம்பதியினர் தலைமறைவானார்கள்.இதைத் தொடர்ந்து தனிப் படையினர் பெங்களூர், மும்பையில் முகாமிட்டு தம்பதியை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை இதற்கு இடையே அந்த தம்பதியினர் நேபாள நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.அத்துடன் தலைமறைவான தம்பதியின் உறவினர்களின் செல்போன் எண்களை பெற்ற போலீசார் தம்பதியினர் உறவினர்களின் செல்போனுக்கு தொடர்பு கொள்கிறார்களா ? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது : இந்த வழக்கில் தலைமறைவான தம்பதி நேபாளத்திற்கு தப்பி சென்று இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த தம்பதி மீது இருக்கும் வழக்கு மற்றும் அவர்களின் புகைப்படத்துடன் மத்திய வெளியுறவுத் துறை மூலம் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அத்துடன் நேபாள நாட்டு காவல் துறை அதிகாரிகளிடமும் இதுகுறித்து பேசப்பட்டு வருகிறது. எனவே நேபாள நாட்டில் இந்த தம்பதி பதுங்கி இருந்தால், கண்டிப்பாக தகவல் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.