முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து அதிமுக ஒன்றுபட்டதில் மகிழ்ச்சி. என் மீது களங்கம் ஏற்படுத்த பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வந்துள்ளது. அதிமுகவில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை என லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் முன்னணி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் களைந்து கழகம் ஒன்றுபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீப காலமாக என்னை வைத்து சில வாடகை பேச்சாளர்கள் எந்த வித அடிப்படை ஆதாரமும் இன்றி சொல்லிய கட்டுக்கதைகள் பொய்த்துப் போயின.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மா அவர்களால் செழுமைப்படுத்தப்பட்ட பேரியக்கத்தில் பிரிவுகள் ஏற்படுத்த நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சில வாடகை பேச்சாளர்களால் பரப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த இணைப்பு.

பல கோடி மக்களின் நம்பிக்கையாக திகழும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு லால்குடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது என் வாழ்நாளின் பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். எனது தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிடவும், தொகுதி வளர்ச்சிக்கு உழைப்பதுமே என்னுடைய முதன்மை கடமையாக எண்ணுகிறேன்.

தமிழ்நாட்டில் மீண்டும் அம்மாவின் நல்லாட்சி மலர்ந்திட கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அயராது பாடுபடுவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.