கோவையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதன் தாக்கம் இதுவரை குறையாததால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். பகலில் மட்டுமல்லாமம் இரவிலும் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாத அளவில் உள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது

கோவையிலும் கடந்த ஒரு வாரமாக வெப்பநிலை தொடர்ந்து 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: கோவையில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. வெப்பநிலை 100 டிகிரியை கடந்துள்ளது. இதற்கு முன் 2010ம் ஆண்டில் 100.3 டிகிரி வரை பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கோடைமழைக்கு வாய்ப்பு உள்ளதால், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் குறையக்கூடும் என்றார்.