கோவையில்  பேரூரில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டீசுவரர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. மாலை யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு மலர் பல்லாக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் காலையிலும், மாலையிலும் பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மனுக்கு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது.

சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். 27ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி, மறுநாள் 28ம் தேதி சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29ம் தேதி மாலை 4 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்ட விழா நடைபெறுகிறது.

தேரோட்டத்தை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர். 31ம் தேதி தெப்ப திருவிழா, ஏப்ரல் 1ம் தேதி நடராஜர் அபிஷேகம் நடைபெறுகிறது.