கோவை நகரத்தார் சங்கம் சார்பில் கோவையில் “வைப்ஸ் ஆப் செட்டிநாடு” என்ற பெயரில் 2 நாள் செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா நடைபெறவுள்ளது. காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் 100 க்கும் மேற்ப்பட்ட தொழில் முனைவோர்களின் ஸ்டால்கள் மற்றும், 8 முதல் 16 வயதுக்குட்பட்ட 100 க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் தங்கள் தொழில் திறன்களை வெளிப்படுத்தும் ஸ்டால்கள் இடம்பெறவுள்ளன.
இதுதொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வைப்ஸ் ஆப் செட்டிநாடு நிகழ்ச்சியின் தலைவர் பழனியப்பன், துணை தலைவர் மணிகன்டன் மற்றும் கோவை நகரத்தார் சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் சுந்தரேசன் ஆகியோர் கூறும் போது: கோவையில் ஆண்டு தோறும் கோயம்புத்தூர் விழா, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதை கோவையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

இதில் கோவை நகரத்தார் சங்கத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பிய நாங்கள் எங்களது செட்டிநாடு பாரம்பரியத்தை கோவை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த 2 நாள் விழாவை நடத்துகிறோம். இங்கு செட்டிநாடு வீடு போன்ற பிரம்மாண்டமான முகப்பு அமைத்து, அதில் பல வகையான பொருட்கள் மற்றும் செட்டிநாடு உணவு வகைகளின் விற்பனை கூடங்கள் இடம் பெற உள்ளது. செட்டிநாடு உணவுகள் அனைத்தும் வாழை இலையில் பரிமாறப்படும். உணவு வகைகள் குறைந்த விலையில் இருக்கும்.
மேலும் இந்நிகழ்வில் செட்டிநாடு மக்கள் அணியும் நகை கண்காட்சி, பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திறன் போட்டிகள், கலை, கையெழுத்து, பேச்சுப்போட்டி போன்றவைகளும் நடைபெறும். பாட்டு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் அனைத்தும் ஒரே இடத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு, அனுமதி இலவசம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

