கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நான்கு பெரும் கண்காட்சிகள் இன்று தொடங்கியுள்ளன.
வேர்மார்ட் (கிடங்கு மற்றும் பொருள் கையாளல் கண்காட்சி), டோபேக் (மொத்தப் பாக்கேஜிங் கண்காட்சி), டோபிளாஸ்ட் (மொத்த பிளாஸ்டிக் கண்காட்சி), ஆட்டோரோபர்ட் (ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் கண்காட்சி) ஆகியவை ஆகஸ்ட் 1 முதல் 3 வரை நடைபெறுகின்றன.
இந்த கண்காட்சிகளில் நாட்டின் முன்னணி நிறுவனங்களும், சர்வதேச பிராண்டுகளும் பங்கேற்றுள்ளன. 300க்கும் மேற்பட்ட ஸ்டால்கள், ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள், தொழில் முனைவோர், வணிக பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக சிஐஏ தலைவர் தேவகுமார் நாகராஜன், எம்எஸ்எம்இ (டிஎப்ஒ) உதவி இயக்குநர் சி.பி. ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி குறித்து மெட்ராஸ் டச் ஈவன்ஸ் மற்றும் ட்ரேட் பேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விவேகானந்தன் பேசுகையில்: இந்த 4 கண்காட்சிகளின் பிரதான குறிக்கோள் தொழில்துறை வளர்ச்சிக்கும், புதுமைக்கும், வணிக இணைப்புகளுக்கும் சக்திவாய்ந்த தளத்தை உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும்.
150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொழில்துறை தயாரிப்புகள், நேரடி டெமோ காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 10,000-க்கும் அதிகமான தொழில் நிபுணர்கள், வணிக பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்கிறோம். ரூ.85 கோடி மதிப்பிலான வணிக பரிமாற்றங்கள் நிகழும் எனப் பேசினார்.

