பொருளாதாரத்தில் எப்படியேனும் முன்னேறி மனம் தளராமல், தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். என்னதான் வெற்றிக்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி மட்டும் ஒரு சிலருக்கு எட்டாக் கனியாகவே இருக்கும்.

ஜோதிடத்தில் ஒருவரின் வெற்றி குறித்து புரிந்துகொள்ள பல விதிகள் உண்டு. ஜாதக ரீதியாக இதை எளிதில் கணித்திட, ஒருவரின் ஜனன ஜாதகத்தில், லக்கினம் (ல) அல்லது சந்திரனை (சந்) சுப கிரகமான ‘குரு’ தன் 5, 7, 9 ஆம் பார்வையால் பார்த்தால், நிச்சயமாக ஒரு காலம் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். மேலும், இந்த அமைப்பைப் பெற்றவர்கள் பொருளாதார ரீதியாக முன்னுக்கு வருவதும், மதிப்பு மரியாதையில் உயர்வதும், அவர்கள் வாழ்க்கையில் நடைபெறும்.

நம்மில் பலருக்கும் வாழ்க்கை மீதான ஒருவித அச்ச உணர்வு, பதட்டம் எழும். அதாவது, தீர்க்க முடியாத வியாதியால் அவதி, சட்ட ரீதியான சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம், நோய் நொடிகளில் படுத்து விடுவோம் என்கின்ற பயம் அல்லது பொருளாதாரத்தை இழந்து நிற்போமோ? என்பன போன்ற பலவித அச்சம் இருக்கும்.

ஒரு நொடி, உங்கள் ஜாதகத்தைப் புரட்டிப் பாருங்கள். அதில், லக்கினத்தின் மீது குருவின் பார்வை இருந்தாலோ அல்லது லக்னாதிபதி ஆட்சியாக இருந்தாலோ வாழ்க்கை, பொருளாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என ஜோதிடக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.