இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை, ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து, அரசு உயர் அதிகாரிகளுக்கான யோகா மற்றும் தலைமைத்துவ பயிற்சியை நடத்தியது.

கோவை ஈஷா யோகா மையத்தில் ஜனவரி 5 முதல் 9ம் தேதி வரை நடைபெற்ற பயிற்சியில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி மற்றும் மத்திய அரசுப் பணிகளின் ‘குரூப் ஏ’ பிரிவை சேர்ந்த 88 உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகாரிகளின் அழுத்தமான சூழல்களைத் திறம்படக் கையாளுதல், சிறந்த நிர்வாகத்திற்காக துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்வில் தெளிவைப் பெறுதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு சத்குரு அவர்களால் இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்குரு, துன்பம் குறித்த பயமே மனித ஆற்றலை முடக்குகிறது. வெளிச்சூழலில் என்ன நடந்தாலும், ஒருவருடைய உள் சூழ்நிலை மாறாமல் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தால், அவர் தனது பணியில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்.

மகிழ்ச்சியின் ஊற்று நமக்குள்ளேயே இருப்பதை உணர்வதன் மூலம் துன்பம் குறித்த பயத்திலிருந்து விடுதலை பெறலாம், அதுவே ஒரு மனிதனைத் தனது வாழ்வில் பெரிய அடிகளை எடுத்து வைக்கச் செய்யும் எனக் கூறினார்.

இந்த பயிற்சியில் சத்குருவுடனான கலந்துரையாடல்கள், யோகாசனங்கள் மற்றும் சக்திவாய்ந்த தியான அமர்வுகள் உள்ளிட்டவை இடம்பெற்று இருந்தன.