நாட்டின் 77வது குடியரசு தினவிழா வரும் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னையில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாக பிரம்மாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அன்று நடைபெற உள்ளன.

இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளநிலை பி.காம். அக்கவுண்டிங் & பைனான்ஸ் துறை இரண்டாமாண்டு மாணவி ஸ்வாதி, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர், பாரதியார் பல்கலைக்கழக அளவில் சிறந்த மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து தென்னிந்திய அளவில் கேரளாவின் பாலக்காடில் உள்ள லீடு மேலாண்மைக் கல்லூரியில் நடைபெற்ற அணிவகுப்பு தேர்வில் பங்கேற்று அதில் சிறந்த மாணவியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, ஜனவரி 26 அன்று சென்னையில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க உள்ளார்.

மாணவியை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.