ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பொங்கல் விழா கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.

மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து வந்து ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கோலப்போட்டிகள்,  பறையிசை,  சிலம்பம், பம்பரம் விடுதல், பல்லாங்குழி ஆட்டம், நூறாங்குச்சி, ஐந்து கல் ஆட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் அம்மியில் மஞ்சள் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்தல், மருதாணி வைத்தல், பூ கட்டுதல், நாட்டுப்புறப் பாட்டு ஆகிய கிராமிய போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் செய்து தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

இதேபோல், கிராமிய ஆடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ரொக்கப்பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.