கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி அனைத்து துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோவையில் வெள்ளம் ஏற்பட்டால் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும்.
இந்த நிலையில் கோவைபுதூர் தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய தீனைப்பு அலுவலர் மார்ட்டின், சிறப்பு நிலை அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இன்று காலை பேரூர் பெரிய குளத்தில் வெள்ளத்தில் சிக்கி அவர்களை மீட்பது போன்று ஒத்திகை நடத்தினர்.
குளத்திற்குள் சிக்கி தவித்தவரை தனியார் பரிசல் உதவியுடன் சென்று மீட்பது எப்படி? என்று பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். அதேபோன்று லைவ் ஜாக்கெட், கயிறு மூலமும் மீட்பு பணிகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.
அவசர நேரத்தில், தெர்மாகோல் மற்றும் காலி தண்ணீர் வாலி உதவியுடன் வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீண்டு வருவது எப்படி? என்பது குறித்தும் 2 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை நடத்திக் காட்டினர். இதை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பார்த்தனர்.
இதற்கு இடையே கோவை மண்டலத்தில் உள்ள 17 கிளை போக்குவரத்து பணி மனைகள் மூலம் இயக்கப்படும் 949 பேருந்துகள் மழை காலங்களில் ஒழுகாமல், பயணிகள் பாதுகாப்புடன் பயணிக்கும் வகையில் அனைத்து பராமரிப்பு பணிகளுக்கும் உத்தரவு விடப்பட்டுள்ளது. ஒரு வாரமாக இந்தப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் அனைத்து பேருந்துகளிலும் தேவையான மழைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
