பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கடந்த 58 ஆண்டுகளாக ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 59வது கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்ட் 23 முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கோபால கிருஷ்ணன், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் ருத்ரமூர்த்தி மற்றும் செயலாளர் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி இன்ஜினியரிங் கல்லூரி உள்விளையாட்டு அரங்கத்தில் போட்டிகள் நடைபெறும்.
அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும். வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.
போட்டியில் எ – பிரிவில் சென்னை – இந்தியன் வங்கி அணி, பெங்களூரு – பேங்க் ஆஃப் பரோடா அணி, புதுதில்லி – இந்திய விமானப்படை அணி, கோவை – இராஜலட்சுமி ஹெச்எஸ்எ போன்ற அணிகளும், பி – பிரிவில் புதுதில்லி – இந்திய இராணுவ அணி, சென்னை – இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, லோனாவாலா – இந்திய கப்பல் படை அணி, கேரளா – கேரளா மாநில மின்சார வாரிய அணிகள் உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. குறிப்பாக இப்போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் 6 வீரர்கள் அவரவர் அணிக்காக விளையாடுகின்றனர்.

போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் தினமும் மாலை 5.30 மணிக்கு துவங்கும். அனுமதி இலவசம். பி.எஸ்.ஜி. புற்றுநோய் மைய இயக்குனர் டாக்டர் பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைக்கிறார்.
ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் கோவை ஆட்சியர் பவன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார் எனக் கூறினர்.

ரூ.1 லட்சம் பரிசு
வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 25 ஆயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

