தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (SISPA) 34வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் செல்வன் வரவேற்புரை வழங்கினார். கௌரவச் செயலாளர் ஜெகதீஷ் சந்திரன் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையை வாசித்து, கடந்த ஆண்டில் சிஸ்பா மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் தொழில் சார்ந்த கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.

நிகழ்வில், சைமா முன்னாள் தலைவர் மற்றும் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். சிஸ்பாவின் முன்னாள் தலைவர்கள் துரைசாமி நாயுடு மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு ‘Visionaries of SISPA Award’ வழங்கப்பட்டது.

2025 – 2027ம் ஆண்டிற்கான சிஸ்பா தலைவராக, உடுமலை சண்முகப்பிரியா டெக்ஸ்டைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக கோவை சௌந்தர் டெக்ஸ்டைல்ஸ் வெங்கடேசன், அன்னூர் சிறுவாணி யார்ன்ஸ் கிரிராஜன், வேணிலட்சுமி மில்ஸ் பி லிமிட் பிரதீப், கௌரவச் செயலாளராக கோவை ஹைடெக் ஸ்பின்னிங் மில்ஸ் ஜெகதீஷ் சந்திரன், இணைச் செயலாளராக பொள்ளாச்சி சூரியா ஸ்பின்னிங் மில்ஸ் வெங்கட சுப்பிரமணியன், கௌரவ பொருளாளராக கோவை ஸ்ரீ வெங்கடாசலபதி டெக்ஸ்டைல்ஸ் விஜயகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பொதுக்குழுவில் பஞ்சு இறக்குமதி மீதான வரிவிலக்கை, வரும் 2026 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.  தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில், இந்திய பருத்திக் கழக கிடங்கை அமைக்க, மத்திய ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்பாலைகள் பயன்படுத்தும் பஞ்சுக்கு கிலோவுக்கு ரூ.10/- நுகர்வு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.