ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிரி தொழில்நுட்பவியல் துறை, கணினி அறிவியல் துறை ஆகியவை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவல்தொடர்புத் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், உயிரி தொழில்நுட்பத் துறைத்தலைவர் ரத்தீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி பேசியதாவது: ஆராய்ச்சிகளை யாரும் தனியாக செய்யமுடியாது. நல்ல ஆராய்ச்சியானது கூட்டு இணைப்பால் மட்டுமே நிகழும். கல்வி நிறுவனங்களுடனோ, தொழில் நிறுவனங்களுடனோ இணைந்து ஆராய்ச்சிகளை செய்யும்போது புதுமையான, பயனுள்ள ஆய்வு முடிவுகளைப் பெற முடியும். ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவிகளை அரசு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களின் மூலம் பெற்று சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டால் கல்வித்தரம் நிச்சயம் உயரும் என்றார்.
கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, இயற்பியல், வேதியியல், உயிர் அறிவியல், கணினி அறிவியல், உயிரி தகவல் தொழில்நுட்பவியல், கட்டமைப்பு உயிரியல், அடிப்படை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சிகளை நிதி நிறுவனங்களின் துணையுடன் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இரு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த மாணவர்கள் இணைந்து முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள், இடைநிலைப் பயிற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன.
