மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்க எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நேரடி ஆய்வுக்கு உத்தரவிட்ட நிலையில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடமான மருதமலை சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்குச் செல்ல யானைகள் இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.
இந்தப் பகுதியில் ரூ.110 கோடி செலவில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சிலை அமைக்கப்பட உள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 137 மீட்டர் தொலைவில் உள்ளதால், இப்பகுதியில் சிலை அமைவதால் யானை வழித்தடங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து உயர் நீதிமன்றம் சிலையின் இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக மறுபரிசலனை செய்யும்படி கூறி சிலை அமைய உள்ள சரியான இடம், பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து முழு விவரங்களுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
