கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரிக்கு, கொங்கு மண்டலத்தில் உள்ள பாரம்பரிய மருத்துவ குறிப்புகளை ஆவணப்படுத்துவதற்காக, முனைவர் பட்ட மேல் ஆய்வுக்கான நிதி உதவியை இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியது.

அதன்படி, முனைவர் சௌந்தரராஜ், இந்த ஆராய்ச்சியில் பாரம்பரிய தமிழ் மருத்துவ குறிப்புகளை சேகரித்து ஆவணப்படுத்துவார். மொழி ஆராய்ச்சி துறையில் அறிவுசார் பாரம்பரியங்களை பாதுகாத்தல் என்ற பிரிவின் கீழ் கொங்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகள் நடைபெறும்.

பாரம்பரிய மருத்துவர்களை நேர்காணல் செய்து கேள்வித்தாள் முறையில் விவரங்கள் சேகரிக்கப்படும். 6 மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ள பாரம்பரிய மருத்துவ குறிப்புகள், மருந்து தயாரிப்பு முறைகள், அது சார்ந்த குறிப்பேடுகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படும்.

இதற்கான நிதி அனுமதி ஆணையை கல்லூரியின் செயலர் சி.ஏ.வாசுகி.,யிடமிருந்து, சௌந்தர்ராஜ் பெற்றுக்கொண்டார். ஆய்வானது தமிழ் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை நெறிக்காட்டுதலின் கீழ் நடைபெறும்.