கோவை உப்பிலிபாளையம் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலரும் மலர் மாலைகள் அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்களுடன் கலந்துரையாடி தேர்தலில் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், அப்பகுதியில் உள்ள மைதானத்தில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி ஆதரவை பெற்றார். இளைஞர்களுடன் இணைந்து கே ஆர் ஜெயராம் சிறிது நேரம் வாலிபால் விளையாடியது அங்கிருந்தவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, நடந்து சென்று வீடுதோறும் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்களுடன் நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.