ஈஷா கிராமோத்சவம் 2025 போட்டிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க உள்ளனர்
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் ஈஷா தன்னார்வலரும், பிரபல எழுத்தாளருமான மரபின் மைந்தன் முத்தையா கலந்து கொண்டு இந்தாண்டு போட்டிகள் குறித்து பேசினார். அவருடன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமோத்சவ தன்னார்வலர் சங்கவி, விளையாட்டு வீரர்கள் ராகேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் முத்தையா அவர்கள் பேசியதாவது: ஈஷா கிராமோத்சவ திருவிழா சத்குருவால் 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கானதாக இல்லாமல் விவசாயிகள், தூய்மை பணியாளர்கள், மீனவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் ஆகிய எளிய கிராம மக்களுக்காக நடத்தப்படுகிறது.
இந்தாண்டு கிராமோத்சவ விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் ஆண்களுக்கான வாலிபால் மற்றும் பெண்களுக்கான (த்ரோபால்) போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மற்றும் முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 30,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 6,000-க்கும் மேற்பட்ட அணிகள் மூலம் 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளையாட இருக்கின்றனர். அதில் குறிப்பாக 5,000-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்களும் களமிறங்கவுள்ளனர்.
இந்த போட்டிகள் 3 நிலைகளில் நடைபெறும். முதல் நிலை கிளஸ்டர் அளவிலான போட்டிகள் இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும். இரண்டாம் நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி நடைபெறும்.
இதனையடுத்து ஆறு மாநில அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டிகள் செப்டம்பர் 21ம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டிகளில் மாற்று திறனாளிகளுக்கான பாரா கைப்பந்து (வாலிபால்) போட்டியும் நடைபெறும்.
இப்போட்டிகளில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மக்களால் மட்டுமே அணிகள் உருவாக்கப்பட முடியும். தொழில்முறை வீரர்கள் அணிகளில் இடம்பெற முடியாது. இதில் கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம், ஆனால் முன்பதிவு செய்வது கட்டாயமாகும். (முன்பதிவுக்கு;- isha.co/gramotsavam , மேலும் தகவல்களுக்கு- 83000 30999)
கிராமிய கலை நிகழ்ச்சிகள்
இந்த திருவிழாவில் விளையாட்டு போட்டிகளுடன், நம் தமிழ்நாட்டின் தவில் – நாதஸ்வரம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம், கேரளாவின் பஞ்சரி மேளம், செண்ட மேளம், தெலுங்கானா பழங்குடி மக்களின் குசாடி நடனம், கர்நாடகாவின் புலி வேஷம் போன்ற பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும், பொது மக்களுக்கான கோலப் போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனுடன் சிலம்பம் போட்டிகளும் நடைபெற உள்ளன இவ்வாறு அவர் பேசினார்.
பரிசுத்தொகை
ஈஷா கிராமோத்சவ விளையாட்டு போட்டிகளின் 3 நிலைகளிலும் பரிசுத் தொகைகள் வழங்கப்பட உள்ளன. முதல் நிலை போட்டிகளில் முதல் நான்கு இடங்களை வெல்லும் அணிகளுக்கு முறையே ரூ.10,000, 7,000, 5,000 மற்றும் 3,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. அதே போன்று மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே ரூ.12,000, 8,000, 6,000 மற்றும் 4,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன.
இறுதிப்போட்டியில் முதல் நான்கு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு முறையே 5,00,000, 3,00,000, 1,00,000, 50,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளன. போட்டிகளின் மூன்று நிலைகளிலும் சேர்த்து மொத்த பரிசுத் தொகையாக ரூ.67 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.

