தமிழக அரசு சார்பில் சென்னையில் 50வது ஆண்டு பொன்விழா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி ஹேமந்த்ரா மாநில அளவில் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி கடந்த செப்டம்பர் 6 முதல் 14 வரை மாநில அளவில் நடத்தப்பட்டது. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பெண்கள் பிரிவு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் யூத் விமன் பிரிவு ஆகியவற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்து தமிழக அளவில் மூன்று வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.
தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் நடத்திய இப்போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவி ஹேமந்த்ராவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பதக்கம், சான்றிதழை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவியை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி பாராட்டினர்.

