கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து வரும் திங்கள்கிழமை (14.7.2025) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி கூறும் போது : திமுக மாணவரணி சார்பில் வரும் திங்கள்கிழமை கோவை டாடாபாத் பகுதியில் தமிழ்நாட்டில் கல்வி உரிமையை காவு வாங்க துடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிராக செயல்படும் பாஜக வஞ்சக செயலை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் “எல்லோருக்கும் எல்லாம்” என்ற முழக்கத்துடன் ஏழை, எளிய அனைத்து தரப்பு மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை கற்ற தர திட்டங்கள் கொண்டு வரும் நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி தனது பதவி, கூட்டணி சுகத்திற்காக தனது எஜமானின் உத்தரவிற்காக தமிழக கல்வி நிலையங்களை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார்.
அறநிலையத்துறை கல்வி நிலையங்களில் சதி நடக்கிறது என ஆர்.எஸ்.எஸ் போல மத கலவர புத்தியை மூளைக்குள் ஏத்திக் கொண்டும், தலையாட்டி பொம்மை போல கோவையில் தனது கருத்துகளை பேசியுள்ளர்.
ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2500 கோடி கல்விக்கான நிதியை வழங்காததால், முதல்வர், அமைச்சர் அதிகாரிகள் கேட்டு வரும் நிலையில் இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது முதலாளியிடம் கேட்டு பெற்றுத்தர திரானி இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கூட மாநில அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. அப்போது திமுக போராடியது, அதன் விளைவாக நிதி பெறப்பட்டது.
தமிழக உரிமைகளை கேட்காத எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அறிவித்த ஒரே வாரத்தில் பாஜக தலைவர்களை பங்காளிக்களாக நினைத்து அவர்கள் மத்தியில் பேசுகிறார் அறநிலையத்துறையில் கல்வி வழங்குவது சதி என்கிறார். கடந்த காலத்தில் திராவிட இயக்க தியாகத்தால் வந்த கல்வியை அழிக்கப்பார்க்கிறார். இவர்கள் கூட்டணி கல்வியை சிதைக்கும் கூட்டணி என கூறினார்.
கல்வியை பல இயக்கங்கள் போராடி பெற்று கொடுத்த நிலையில், நடிகர் விஜய் ரூ.5 ஆயிரம் கல்வி உதவி தொகை என வழங்கு புகைப்படம் எடுத்துக் கொள்வது அறமற்ற செயல். இந்தி திணிப்பை எதிர்த்து போராடி, தமிழ் தனித்து நின்றதால் விஜய் இன்று தமிழ் திரைப்படங்களில் நடித்து 200 கோடி வாங்குகிறார். ஒரு வேளை பீகார், உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்திருந்தால் இங்கு பானிபூரி மட்டுமே விற்பனை செய்ய வந்திருப்பார் என கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மாணவரணி துணைச்செயலாளர்கள் விஜி.கோகுல், ஈரோடு வீரமணி, மாவட்ட அமைப்பாளர்கள் சிவபிரகாஷ், அந்தோணி ராஜ், சூலூர் பிரபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
