கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர் மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட பிரசவ அறை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி.எஸ்.ஆர். குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர் ரஜினி குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சூரஜ்குமார், இயக்குனர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிரண்குமார், மகப்பேறு நிபுணர் டாக்டர் திவ்யா, குழந்தை நல நிபுணர்கள் டாக்டர் சுகப்ரியா, டாக்டர் கோகிலா வாணி, மயக்கவியல் நிபுணர் டாக்டர் பிரசீதா உள்ளிட்ட சிறப்பு நிபுணர் குழுவினர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மருத்துவ இயக்குனர் டாக்டர் ரஜினி குமார் கூறுகையில்: 1993ல் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது. அப்போது இருந்தே பிரசவங்களை கையாண்டு வருகிறோம். தற்போதுள்ள இளம் தலைமுறையினர் விரும்பும் வகையில், பிரசவ அறையை மேம்படுத்தியுள்ளோம். இந்த புதிய பிரிவு, தாய்மார்களுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, நவீன மற்றும் முழுமையான சிகிச்சை வசதிகளை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
நவீன மருத்துவ உபகரணங்கள், மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அனுபவமிக்க மருத்துவ நிபுணர் குழுவின் சேவையுடன், மகப்பேறு சிகிச்சை தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் இந்த பிரிவு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.யூ உள்ளிட்ட பிரசவம் சார்ந்த அனைத்து சேவைகளும் 24 மணிநேரமும் செயல்படும் என்றார்.

மகப்பேறு நிபுணர் டாக்டர் திவ்யா கூறியதாவது: மேம்படுத்தப்பட்ட இந்த பிரசவ அறையில், தாய்மார்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகபிரசவத்திற்கான அனைத்து வித வசதிகளும் இங்குள்ளன. உடற்பயிற்சி, நோயாளி கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் தரப்படுகிறது. அவசர நிலையில் அறுவை சிகிச்சை தேவைப்படும் போது, அதற்கான அறுவை சிகிச்சை அரங்குகளும் இங்குள்ளன எனக் கூறினார்.
