தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் இனிப்பு கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர், மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் இனிப்பு மற்றும் காரம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் தீபாவளி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
- இனிப்பு, காரவகைகள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். இனிப்பு/காரம் தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, இனிப்புவகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ, காரவகைகளில் எவ்வித நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கொண்டு பொட்டலமிட பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்புதரங்கள் சட்டம் 2006 பிரிவு 58-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
- இனிப்பு/கார தயாரிப்பின் போதும், இருப்பு வைக்கும் போதும் அச்சிடப்பட்ட செய்திதாள்களை விரித்து எண்ணைய் உறிஞ்சும் வகையில் வைத்திருக்கும் நடைமுறையை கண்டிப்பாக பின்பற்ற கூடாது. மேலும் சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பேப்பர்/கவர் கொண்டு பொட்டலமிடக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது, மீறினால் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் 2006-ன் படி அபராதம் விதிக்கப்படும்.
- இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய், நெய் மற்றும் மூலப் பொருட்களின் விபரங்களை முழுமையாக அதன் கொள்முதல் கேன்களில்/டின் லேபிளில் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
- பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை தனியாக இருப்பு வைக்க வேண்டும் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளின் உபயோகிக்கும் கால அளவை லேபிளில் முழுமையாக அச்சிடப்பட வேண்டும்.
- பால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு வகைகளோடு சேர்க்காமல் தனியாக பேக் செய்து வழங்க வேண்டும்.
- இனிப்பு மற்றும் காரவகைகளை தூய்மையான குடிநீரைக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறை இனிப்பு, காரங்களை தயாரித்த பிறகு பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தமாக கழுவி பூஞ்சை தொற்று வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இனிப்பு வகைகள் சில்லறை முறையில் (NonPacked/Loose Sweets) விற்கப்படும் பொருட்களில், பயன்படுத்தும் தேதி (Use by Date) தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளில் எண்ணெய்/நெய்/வானஸ்பதி பயன்படுத்தப்பட்டதா எனவும் பால் சார்ந்த பொருட்கள் பற்றிய பதிவுகள் காட்சிபடுத்தபட்டிக்க வேண்டும் மற்றும் பதிவேட்டில் பராமரிக்கப்படவேண்டும்.
- பண்டிகை காலத்தில் மட்டும் சமுதாய கூடங்கள், பிற இதர இடங்கள் மற்றும் கல்யாண மண்டபங்களில் இனிப்பு மற்றும் காரவகைகள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு/உரிமம் பெற்றுக் கொள்ள உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இனிப்பு மற்றும் காரவகை உணவு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், கையாள்பவர்கள் அனைவரும் FOSTac பயிற்சியினை பெற்றிருக்க வேண்டும் மற்றும் உணவை கையாளுபவர்களுக்கு Medical Fitness Certificate வைத்திருக்க வேண்டும்.
- பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விபரச்சீட்டு இடும் போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுபொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவுபொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்திடல் வேண்டும்.
- FSSAI-ன் வழிகாட்டுதலின் படி, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து இனிப்பு வகைகளுக்கும் தயாரிப்பு தேதி மற்றும் உண்ண தகுந்த காலம் ஆகியவற்றை அந்தந்த இனிப்பு வகைகள் அருகே ஒரு சிறிய போர்டில் எழுதி காட்சிப்படுத்த வேண்டும்.
- பணியாளர்கள் கையுறை, முடிக்கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து தான் பணியாற்ற வேண்டும்.
12. ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்தி இனிப்பு மற்றும் கார வகைகள தயாரிக்கக்கூடாது. இதனை Ruco திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் வழங்க வேண்டும்.
- பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு/உரிமம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு தெரிவிக்கலாம். மேலும் Google Play store- இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafety consumer App என்ற செயலினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.
