பிரபல தமிழ் எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான ‘மரபின் மைந்தன்’ முத்தையாவின் 80-வது நூலான ‘சத்குரு – மாறும் யுகத்தின் முகம் (100 வெண்பா மலர்கள்)’ நூல் வெளியீட்டு விழா, கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையில் கோவையில் நடைபெற்றது.

‘நமது நம்பிக்கை’ சார்பில், ராம் நகரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயில் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கே.பி.ஆர். குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி தலைமை தாங்கினார். பூர்ணிமா ஏஜென்சீஸ் நிறுவனத்தின் ராமலிங்கம் நூலை வெளியிட, நெல்லை பெரியலாலா கார்னர் ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மாரியப்பன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சத்குருவின் ஆன்மிகப் பங்களிப்புகள், வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் ஆளுமைத் திறன்களைப் போற்றும் வகையில் 100 வெண்பாக்களை இந்த நூலில் முத்தையா எழுதியுள்ளார். தற்காலத்தில் அரிதாகப் பயன்படுத்தப்படும் வெண்பா இலக்கிய வடிவில் முழுமையாக அமைந்துள்ள இந்த நூலில், வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு வெண்பாவிற்கும் விளக்கவுரையும் தரப்பட்டுள்ளது.

இவ்விழாவில் முனைவர் ஞானாம்பிகா மற்றும் கனகதூரிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘நகைச்சுவை இமயம்’ ஈ.ரெ. சண்முகவடிவேல் சிறப்புரையாற்றினார்.

தமிழ் இலக்கியத்தின் தொன்மையான வடிவங்களுள் ஒன்றான வெண்பா, கடுமையான இலக்கண விதிகளைக் கொண்டது. இன்றைய காலத்தில் வெண்பா வடிவில் நூல்கள் வெளிவருவது அரிதாக உள்ள நிலையில், சத்குருவைப் போற்றும் 100 வெண்பாக்களுடன் விளக்கவுரையையும் இணைத்து நூல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.