மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டர்கள் விலை உயர்ந்தன.

வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கள்ள சந்தைகளில் அதிக விலைக்கு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் 6000 முதல் 8000 ரூபாய் வரை கள்ள சந்தையில் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதிக விலை கொடுத்தாலும் சிலிண்டர் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படுவதால் பல்வேறு சிறு குறு தொழில் துறையினர், உணவகங்கள், சாலையோர உணவக கடைக்காரர்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இதன் காரணமாக தொழில் துறையில் மூலப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. உணவகங்களில் உணவுகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வணிக சிலிண்டர் விலையை 990 ரூபாய் உயர்த்தியுள்ளது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக தொழில் துறையினரும், உணவக உரிமையாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிக சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், வணிக சிலிண்டர்கள் கள்ள சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும், தட்டுப்பாடு இல்லாமல் சிலிண்டர் வினியோகம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.