தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட ரங்கோலி கோலங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், வண்ணமயமான தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் சின்னங்களுடன் மாணவர்கள் உருவாக்கிய இந்த ரங்கோலி கோலங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
இந்த நிகழ்வை, கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான பவன்குமார் நேரில் பார்வையிட்டார். மேலும், இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த தேர்தல் பார்வையாளர்களும் இதில் பங்கேற்றனர்.
மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தேர்தல் விழிப்புணர்விற்கான அவர்களின் ஆர்வத்தை ஆட்சியரும் பார்வையாளர்களும் பாராட்டினர். வரும் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
