ஈஷா சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் தனிநபர் ஒருவரால் இவ்விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஈஷாவின் இச்சேவையை ஓர் புனிதமான நற்பணி என்று பாராட்டினார்.
மேலும், மனுதாரருக்கு மாற்று நிலம் வழங்குவது தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு ஏற்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஈஷா சார்பில் கட்டப்பட்ட நவீன எரிவாயு மயானத்திற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் “இவ்வழக்கில் மனுதாரருக்கு எந்தவொரு சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை. எரிவாயு மயானம் முறையான பஞ்சாயத்து அனுமதியுடன், விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு மயானம் கட்டப்படுவது அதுவும் எரிவாயு மயானமாக கட்டப்படுவது சமூகத்திற்கு பயன்படும், இதனை பொதுநலனுக்கு எதிரானது என்று கூற முடியாது” எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரர் ஏற்கனவே தனது நிலத்தின் ஒரு பகுதியை ஈஷாவிற்கு விற்றுள்ளதைக் குறிப்பிட்டு எஞ்சிய நிலம் தொடர்பாக இரு தரப்பினரும் பேசி ஒரு சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக தீர்க்க ஒப்புக்கொண்டனர். இதற்காக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேந்திரனை மத்தியஸ்தராக நியமிக்க உத்தரவிட்டது.
ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.
