கோவையில் குரும்பா சமுதாய மக்களை அவமதிக்கும் விதமாக கடுமையான சொற்களை பயன்படுத்தி அவதூறாக பேசிய வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் சமூக நீதி பேரவை மற்றும் குரும்பா சங்கத்தினர் இணைந்து ரேஸ்கோர்ஸ் செஞ்சிலுவை சங்கம் அருகில் செவ்வாய்க்கிழமை (23.12.2025) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், சமுதாய நல்லிணக்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் அண்மையில் குரும்பா சமுதாய மாநில தலைவரை அவதூறாக பேசியுள்ளதாகவும், இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதி கூட்டமைப்பு, மக்கள் சமூக நீதி பேரவை, தமிழ்நாடு குரும்பர் சமுதாய சங்கம் என பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

