கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் ‘தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ கடந்த நிதியாண்டில் ரூ.5 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவர் கதிரேசன், இயக்குனர்களான ரவிச்சந்திரன் கருப்புசாமி, சிவகுமார் பழனிசாமி, கீதா சத்தியசீலன், ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நளதா, ஆகியோர் பங்கேற்ற ஆண்டு பொதுக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்ட வர்த்தக ஆண்டறிக்கையின் படி 24-25 நிதியாண்டில் தேங்காய் மற்றும் இளநீர் வர்த்தகம் ரூ.5 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 23-24 ஆம் நிதியாண்டில், ரூ.1.50 கோடி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 24-25 நிதியாண்டில் மட்டும் வர்த்தகம் 220 சதவீதம் அபரிமிதமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தலைவர் கதிரேசன் கூறுகையில்: நம் பொருளுக்கு யாரோ ஒருவர் விலை நிர்ணயம் செய்கிறார் என்ற ஆதங்கம் இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்ற தேடுதலில் இருந்த போது ஈஷா அமைப்பு வரப்பிரசாதமாக வந்தது. அவர்களின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றாக எங்களையும் சேர்த்துக் கொண்டு உதவி செய்கின்றனர். விளைபொருள் விற்பனை, சந்தைப்படுத்துதலில் அவர்களின் வழிகாட்டுதல் மிகப்பெரிய அளவில் உதவி செய்கிறது எனக் கூறினார்.
விவசாயி ராமசாமி கூறுகையில்: உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு வியாபாரிகளுக்கு தேங்காய்களை விற்று வந்தோம். அப்போது அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை.
ஆனால் இந்நிறுவனத்தில் இணைந்தது மூலம், சந்தையில் நல்ல விலை தரும் வியாபாரிகள் வந்து மட்டையை உரித்து தேங்காய் மட்டும் எடை போட்டு எடுத்து செல்கின்றனர். இதன் மூலம் நல்ல விலை கிடைப்பதோடு அடுத்த நாளே பணம் வங்கி கணக்கிற்கு வந்து விடுகிறது. லாபமும் அதிகமாக கிடைக்கிறது எனக் கூறினார்.
