கழிவு நீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரையிலான அனைத்து வகை கழிவுகளையும் எவ்வித மாசுபாடும் இன்றி அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளதாக மேக் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் மிகப்பெரிய சவால் உள்ளது. கழிவுநீர், தொழிற்சாலைகள், திடக்கழிவுகள், காற்று வெளியேற்றம் அல்லது துர்நாற்றம் வீசும் குப்பைகள் என அனைத்து மாசுபாடுகளுக்கும் எங்களிடம் தீர்வு உள்ளது.
இதற்கான தொழில் நுட்பங்கள் டி.ஆர்.டி.ஓ, சி.எஸ்.ஐ.ஆர், சிட்ரா போன்ற முன்னணி இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. அவை ஆற்றல் திறன் கொண்டவை. இதற்கு ரசாயனங்கள் தேவையில்லை. இதை குறைந்த செலவில் செயல்படுத்த முடியும். சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார மதிப்பை இது வழங்குகிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இந்த தொழில்நுட்பத்தை வரவேற்றார்.
கழிவுநீர் நீர் மாசுபாடு, நகராட்சி திடக்கழிவு மேலாண்மை, மேலும் இந்தியாவின் 60 சதவீத நீர்நிலைகள் கழிவுநீர், தொழிற்சாலை வெளியேற்றத்தால் மாசுபட்டுள்ளன. குப்பை கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. இதை கையாள்வது பெரும் சுமையாக இருந்து வருகிறது.
நாங்கள் கண்டுபிடித்துள்ள தொழில் நுட்பத்தால் எவ்வளவு டன் கழிவுகள் இருந்தாலும் நீர், நிலம் மாசுபடாமல் அழிக்க முடியும். இந்த தொழில் நுட்பத்தை நிறுவுவதற்கு மூன்று ஏக்கர் நிலம், பதினாறு கோடி ரூபாய் செலவழித்தால் மட்டும் போதும். குப்பைகளை அழிக்கும் தங்களது தொழில் நுட்பத்திற்கு அங்கீகாரம் வழங்கினால் நீர், நிலம் மாசு அடையாமல் காப்பதே தங்களது குறிக்கோள் என்று தெரிவித்தார்.
