கொடிசியா சார்பில் ‘அக்ரி இன்டெக்ஸ் 2025’ வேளாண் கண்காட்சியின் 23வது பதிப்பு வரும் ஜூலை 10 முதல் 14 வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் அக்ரி இன்டெக்ஸ் தலைவர் ஸ்ரீஹரி பேசுகையில்: இந்த ஆண்டு மொத்தம் 7 அரங்கில் கோழி வளர்ப்பு, சோலார் வளாகம், நாற்றுப் பண்ணை, விலங்குகளுக்கான வெளிப்புற வளாகம் அமைக்கப்பட உள்ளது.
உலகளவில் 5 நாடுகளில் இருந்து விவசாயம் சார்ந்த இயந்திரங்கள் காட்சிப்படுத்த உள்ளது. டெல்லி, ஹரியானா, டெல்லி, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.
காலை 9 முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். பார்வையாளர்களுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம். கோழி வளர்ப்பு தொழில், விவசாயிகளுக்கு அதிக லாபம் அளிக்கக்கூடிய தொழில் வாய்ப்பு ஆகியவை புதிய தொழில் தொடங்க முனைவோருக்கு வாய்ப்பாக அமைய உள்ளது. நாட்டு பசுக்களும், காளைகளும் காட்சிப்படுத்தப்படும்.
வேளாண் சூழலியல், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, உயிரி தொழில்நுட்பம், தேங்காய் நார் கயிறு மற்றும் வாசனைப் பொருள், மலர் வளர்ப்பு, பசுமை குடில் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை காட்சிக்கு வைக்க உள்ளனர் எனப் பேசினார்.
