கோவை ஈஷா யோக மையத்தில், சத்குரு அகாடமியின் சார்பில் ‘மனிதன் ஒரு வளமல்ல’ எனும் வருடாந்திர நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி, மனிதர்களை வெறும் வளங்களாக அல்லாமல், சாத்தியங்களாகப் பார்க்கும் மாற்றத்தை பணியிடங்களில் ஏற்படுத்தும் நோக்கில் சத்குருவால் உருவாக்கப்பட்டது.

மனித திறனை வெளிப்படுத்துவதற்கு ‘நிறுவன கலாசாரம்’ எவ்வாறு உதவும் என்பதை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதர்களை நிர்வகிப்பதற்கு முக்கியமான தலைமைத்துவ திறன்களான கேட்டல், கவனித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தனித்துவமான நாடகப் பயிற்சி அமர்வும் நடைபெற்றது. இதனை பிரபல நாடகக்கலைஞர் அக்ஷரா மிஸ்ரா வழிநடத்தினார்.
ஆக்ஸிஸ் வங்கியின் மனிதவளத்துறை தலைவர் ராஜ்கமல் வெம்படி, ஸ்மைல் குழுமத்தின் நிர்வாக பங்குதாரர் மனீஷ் விஜ், கிண்ட்ரில் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவர் அகஸ்டஸ் அசாரியா, மற்றும் அன்க்யூப் நிறுவனர் டாக்டர் ஷாலினி லால் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

குறிப்பாக பொருளாதார ரீதியாகவும், புவிசார் அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பிய நிச்சயமற்ற எதிர்காலத்தில் திறமையானவர்களை பணிக்கு நியமித்தல், வளர்த்தல், தக்கவைத்துக் கொள்ளுதல் குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் ஈஷாவின் தன்னார்வலர்களான சுவாமி உல்லாசா, சத்குரு அகாடமியின் இயக்குநர் மௌமிதா சென் சர்மா, சவுரப் ஜெயின், சுவாமி சுகதா ஆகியோர் பங்கேற்றனர்.
