உலக மனநல தினத்தை முன்னிட்டு, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 25 மணி நேரம் தொடர்ச்சியான மனநலம் பற்றிய சொற்பொழிவு மற்றும் மனநலப் பயிற்சி அக்டோபர் 9 காலை 10 மணி முதல் 10ம் தேதி காலை 11 மணி வரை உலக சாதனை முயற்சியாக நடைபெற்றது.
உலக மனநல நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வை மருத்துவ உளவியல் நிபுணர்கள் பாபு ரங்கராஜன் மற்றும் ரோஜா ரமணி ஆகியோர் நடத்தினர். மாணவர்களின் மனநலம் சார்ந்த மனஅழுத்த மேலாண்மை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர்மறை மனநிலை, தலைமைத்துவ திறன், உளவியல் நல்வாழ்வு உள்ளிட்ட 13 தலைப்புகளில் பயிற்சியும் சொற்பொழிவும் வழங்கப்பட்டது.
நிகழ்வை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் மனநலம் மற்றும் மனமகிழ்ச்சி மன்றம், கலாமின் உலக சாதனைகள் அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ஜிம்கானா இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
கல்லூரியின் முதல்வர் தேவி பிரியா பேசுகையில்: உலகளவில் எட்டு நபர்களில் ஒருவர் மனநல பாதிப்புடன் உள்ளார் என கூறப்படுகிறது. மனநலப் பிரச்சினைகள் ஏழை, பணக்காரர், சிறியவர், பெரியவர் என வேறுபாடின்றி எவரையும் பாதிக்கக்கூடியவை.
பதட்டம், மிகை அச்சம், மனச்சோர்வு போன்றவை பொதுவாகக் காணப்படும் மனநலக் குறைகள். மாணவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளானால் சிறப்பாக செயல்பட முடியாது. போதுமான விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் மூலம் நல்ல மனநலத்தைப் பெற முடியும்; இது அவர்களுக்கு வாழ்க்கைச் சவால்களை எளிதாக எதிர்கொள்ள உதவும். உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலனும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.
