வள்ளலார் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்
வரும் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்திரோடு, போத்தனூர் ஆடு/மாடு அறுவைமனைகளும் செயல்படாது.
உத்தரவை மீறி செயல்படும் கடைகளின் மீது மாநகராட்சி சட்ட விதிகளின் படி, அபராதம், பறிமுதல் கடைகளை பூட்டி சீல் வைத்தல் மற்றும் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
