கோவை ஈஷா யோக மையத்தில் ‘குரு பௌர்ணமி விழா’ சத்குரு முன்னிலையில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம, பழங்குடியின மக்கள் பால் குடத்துடன் பவனி வந்து, அவர்கள் கைகளினாலேயே தியானலிங்கத்திற்கு பால் அபிஷேக அர்ப்பணம் செய்தனர்.
சத்குருவின் அருளுரை, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் இதில் பங்கேற்றனர். இசை நிகழ்ச்சியில் மோஹித் சௌகான், பார்த்திவ் கோஹில் உள்ளிட்ட தலைசிறந்த இசை கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மொத்தம் 103 இடங்களில் சத்குருவின் சத்சங்க நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

குரு பௌர்ணமி நாள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, 15,000 ஆண்டுகளுக்கு முன்பு, குருபௌர்ணமி எனும் அந்தப் பௌர்ணமி நாளன்று, ஆதியோகி தன் கவனத்தைச் சப்தரிஷிகள் மீது திருப்பினார். மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக, நாம் இயற்கையின் எளிய விதிகளுக்குள் கட்டுண்டு கிடக்க வேண்டிய அவசியமில்லை என்பது மனிதர்களுக்கு நினைவூட்டப்பட்டது.
இந்தக் கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்வது எப்படி என்பதற்கான வழிகளை ஆதியோகி வழங்கினார். நாம் விருப்பத்துடன் முயற்சித்தால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கதவும் திறக்கும். அன்பும் ஆசிகளும் எனப் பதிவிட்டுள்ளார்.

