தமிழ்நாட்டில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில், திமுக மாணவரணி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு பிரச்சாரம் இவ்வாரம் முழுவதும் நடைபெறுகிறது.
கல்லூரி வாயில்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன்மூலம் தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் கல்வி துறையில் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் பற்றி மாணவர்களுக்கு நேரடியாக எடுத்துரைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக திமுக மாணவர் அணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஒன்றிய அரசு, பல்கலைக்கழக மானியக் குழுவின் வாயிலாக கல்வித் துறையை நெருக்கடிக்கு தள்ளிய நேரத்தில் கூட, இடை நிறுத்தம் இல்லாமல் கல்வித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
தவப்புதல்வன், காலை உணவு திட்டம், உரிமைப் பெண், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல முக்கிய திட்டங்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் கல்வியை மக்களிடம் கொண்டு சென்றுள்ளார்.
தமிழக பள்ளிகளில் சாதி குறித்த போதனை இல்லாமல், ஒருமித்த சமூகக் கோட்பாடுகள் மூலம் கல்வி அளிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் இடையே இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.
மாணவர்களிடம் அரசியல் விழிப்புணர்வை விதைப்பது இந்த முயற்சியின் நோக்கமாகும். திராவிட இயக்கம் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஒரு வாரத்துக்குள் மாணவர்களிடம் எடுத்துரைப்போம் எனப் பேசினார்.
