கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி குழுமத்தின் சார்பாக ஆண்டுதோறும் கல்வி விருது வழங்கும் விழா கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

இதில் ஒவ்வொரு ஆண்டும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டுக்கான கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி விருதுகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கேஜி குழுமத்தின் தாளாளர் டாக்டர் பக்தவத்சலம் வாழ்த்துரை வழங்கினார். கேஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் தலைமை உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர் இலக்குகளை வகுத்து, வெற்றி பெறுவதற்கான யுத்திகளை எடுத்து கூறினார்.

தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், உள்ள மேல்நிலை, மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், பணியாற்றி வரும் முதல்வர்கள், சிறந்த ஆசிரியர்கள், நல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருதுகளும், பரிசுகளும் வழங்கி பெருமைப்படுத்தப்பட்டது.

KGISL scaled

மேலும் ஆசிரியர் பணியே அறப்பணி  என்று திறம்பட பணியாற்றிய  26 சிறந்த ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவின் வாயிலாக 156 பள்ளிகளின் முதல்வர்களுக்கும், 1430 ஆசிரியர்களுக்கும், 1983 மாணவர்களுக்கும், விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

இதில் 183க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 4000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், என பலரும் கலந்துகொண்டு விருதுகளை பெற்றனர். நிகழ்ச்சியில், கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, கோவை மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார், கே.ஜி கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த்குமார் ராஜேந்திரன், செயலர் வனிதா, கல்லூரியின் முதல்வர் வித்யா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.